வியாபாரத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி

கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியது!’ பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே தொழில் முனைவோர் ஆன ஜோதி: நான் ஐந்தாவது படிக்கும் போதே ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. பத்தாவது படிக்கும் போதே, விபத்தில் அப்பா இறந்துவிட, நான் என் அம்மா, அக்கா, மூவரும் நிலைகுலைந்து போனோம். கண்ணீருடன் பொதுத் தேர்வு எழுதினேன். அதில் 91 சதவீத மார்க் எடுத்தேன்.

இதற்கிடையில், என் அம்மாவும் பன்றிக் காய்ச்சலால் இறந்து விட, நொறுங்கிப் போய்விட்டோம். என் மாமா, அவருடன் எங்களை அழைத்து சென்று விட்டார்.அப்ப, நான் பிளஸ் 1 சேர்ந்திருந்த நேரம், அக்கா, பி.டெக்., முதல் வருடம். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டது. அப்போது தான் என் பெற்றோர் நடத்திய டில்லி டெய்லர் கடையை திறக்க முடிவெடுத்தேன்.என் அம்மா அடிக்கடி என்னை கடைக்கு அழைத்துச் சென்று தொழில் கற்றுக் கொடுத்ததால், அதில் ஓரளவிற்கு அனுபவம் உண்டு. அப்போது, பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்தாலும், படிப்பு தொழில் என்று பரபரப்பாக இருந்தேன்.

இப்ப என் கடைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. நான் பொறுப்பேற்ற போது, நான்கு மெஷின்கள் இருந்த இடத்தில் இப்போது, ஒன்பது மெஷின்கள் உள்ளன. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தற்போது, பி.ஏ., சோஷியாலஜி படிக்கிறேன். என் அக்காவை பி.டெக்., படிக்க வைத்தேன். அவர் திருமணத்திற்கு தேவையான நகைகளையெல்லாம் சேர்த்து விட்டேன். நான் இவ்வளவு தூரம் நிமிர்ந்து வந்திருக்கிறதுக்கு என் அக்காவின் உறுதுணையும் காரணம்.கூடவே, என் ஐ.ஏ.எஸ்., கனவிற்கான வேலையும் நடக்கிறது. நாங்கள் பட்ட கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியுள்ளது. எந்த சூழலையும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தைரியத்தை கொடுத்தது. கஷ்டத்தில் இருந்து மீண்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் போராடினால், நிச்சயம் நாளை நம்மை எல்லாரும் நிமிர்ந்து பார்ப்பாங்க!

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Leave a comment

ஆர்வத்தால் சாதித்த ஆர்க்கிமிடீஸ்

குளத்தில் சிறு கல் ஒன்றைப் போட்டால் அது தண்ணீருக்குள் மூழ்கிவிடுகிறது. ஆனால், மிகப் பெரிய கப்பல் தண்ணீரில் மிதப்பதை நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இந்த உண்மையை முதன் முதலில் கண்டறிந்தவர்தான் ஆர்க்கிமிடீஸ் எனும் விஞ்ஞானி.

ஆர்க்கிமிடீஸ் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கணித மேதை. இவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிசிலித்தீவில் சைரக்யூஸ் எனுமிடத்தில் கி. மு. 287- இல் பிறந்தார். சைரக்யூûஸ ஆண்டு வந்த அரசனுக்கு இவர் மிகவும் உதவியாக இருந்து வந்தார்.

ஒரு நாள் அரசன், தங்கத்தாலான கிரீடம் ஒன்றை ஆர்க்கிமிடீஸிடம் கொடுத்து, அது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதுதானா அல்லது வேறு உலோகம் அதில் கலந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படிக் கேட்டுக்கொண்டான்.

கிரீடத்திற்கு எந்தவிதமான பழுதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் சொன்னான். முதலில் ஆர்க்கிமிடீஸýக்கு அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை. அதே சிந்தனையுடன் ஆர்க்கிமிடீஸ் குளிக்கச் சென்றார். தண்ணீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் இறங்கியவுடன் தண்ணீர் மட்டம் உயர்ந்தது.

சிறிதளவு தண்ணீர் வெளியே வந்தது. ஆர்க்கிமிடீஸ் இதைப் பார்த்தார். உடனே அவருக்கு ஒரு உண்மை புலப்பட்டது. “யுரேக்கா! யுரேக்கா!’ என்று கத்திக்கொண்டே குளியல் தொட்டியிலிருந்து எழுந்து ஓடினாராம்!

ஆர்க்கிமிடீஸ் செய்தது இதுதான். ஒரு சிறு தொட்டியில் நீரை நிரப்பிக் கிரீடத்தை அதனுள் மூழ்கும்படிச் செய்தார். அதனால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையை அளந்துகொண்டார்.

பிறகு, கிரீடத்தின் எடைக்குச் சமமான சுத்தத் தங்கத்தை எடுத்து, நீர் நிரம்பிய மற்றொரு தொட்டியில் மூழ்கும்படிச் செய்தார். அதனால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையையும் கணக்கிட்டார். கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதாக இருந்தால் இரு எடைகளும் ஒன்றாக இருக்கவேண்டும் அல்லவா?

ஆனால் அவ்விதம் இல்லை. கிரீடத்தால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையும், சுத்தமான தங்கத்தால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே, கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல என்று முடிவு செய்தார். இதிலிருந்து ஓர் அரிய அறிவியல் உண்மையையும் இவர் வெளியிட்டார்:

“”ஒரு திடப்பொருளுக்குக் காற்றில் இருக்கும் எடையைவிட, திரவத்தில் இருக்கும் எடை குறைவாக இருக்கும்; இந்த இரு எடைகளுக்கும் உள்ள வித்தியாசம் திடப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்.” இதுதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவம் ஆகும்.

கணிதத்தில் மட்டுமின்றி, வானவியலிலும் பெüதிகத்தின் பல துறைகளிலும் ஆர்க்கிமிடீஸ் ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளை உலகுக்குத் தந்துள்ளார்.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Siruvarmani&artid=345177&SectionID=145&MainSectionID=145&SEO=&Title=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D

Leave a comment

விவேகானந்தரின் வெற்றி கதை

கோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் பெயர் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக்காட்டினார்.இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து, ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் போதித்தார்.

இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட, சிகாகோவில் நடந்த சர்வமத மகாசபை மாநாட்டில் பங்கேற்று, அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார்.

மற்றவர்களெல்லாம் அங்கு வந்திருந்தவர்களை “லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’ என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் “டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்’ என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.

“”கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் குப்பை,” என்று முழங்கினார்.ஒருநாள், அவர் தற்செயலாகக் கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின் முன் நின்றதை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள “கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி’ போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டது. அந்தப் படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

விவேகானந்தர் எல்லா உயிர்களையும் தமதாகவே கருதினார். அதற்கு காரணம் அவர் குருவிடம் கற்ற பாடம் தான். குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார்.””நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்,” என்றார் விவேகானந்தர்.””கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்,’ ‘ என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு வந்தார்.””அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?” என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே,””இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!” என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன்,” என்றார்.மற்றவர்கள் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது.

ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசைநிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக்காண செல்லாமல், தன் அறையில் இருந்தார். அப்போது, ஒரு பெண் பாடிய பாடல் அவருக்கு கேட்டது. அதில் சோகம் இழையோடியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவர் இசைநிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார்.””இவள் நடனப்பெண். இழிந்த தொழில் செய்பவள். மற்றவர்கள் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளது பாடல் எனக்கு புதிய பாடத்தைத் தந்தது. தன் வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாகப் பாடினாள். அதைக் கேட்டுஉள்ளம் உருகினேன்,” என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சைக்கேட்ட அவள், அவரது வருகை தன்னை ஆசிர்வதித்ததாகச் சொன்னாள். இழிந்த தொழில் செய்தவர் களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர்.

அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும். அந்தத் துணிவு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=164225

Leave a comment

பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில், 10 வயது மாணவி ஒருவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் தேஜ் பகதூர்-சாயாதேவியின் மகள் சுஷ்மா. தற்போது 10 வயதாகும் இந்த மாணவிக்கு அபூர்வமான கல்வித் திறமை இருப்பது கண்டு, அப்பெண்ணின் பெற்றோர் வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். இதனால், தனது ஏழாவது வயதில் 10ம் வகுப்பு தேர்வையும், இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வையும் எழுதி பாஸ் செய்துவிட்டார். இதையடுத்து, சுஷ்மா லக்னோ பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு படிக்க அனுமதி கேட்டு, லக்னோ பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக் கழகம், சுஷ்மாவுக்கு தற்காலிக அடிப்படையில், அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, உ.பி.,யில் உள்ள கல்லூரி ஒன்றில், பி.எஸ்சி., அறிவியல் பாடத்தில் சுஷ்மா சேர்ந்துள்ளார். சுஷ்மாவின் சகோதரன் சைலேந்திரா கடந்த 2007ம் ஆண்டில், தனது 14ம் வயதில் கம்ப்யூட்டர் சயின்சில் பட்டப்படிப்பை முடித்து சாதனை செய்துள்ளான்.சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் தினக்கூலி. தாயார் சாயாதேவி படிக்காதவர். எனினும், தங்களது பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து, சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் கூறியதாவது: எனது மகளின் திறமையைக் கண்டு, அவளை பட்டப்படிப்பிற்கு அனுமதி அளித்த லக்னோ பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுஷ்மா, கடுமையான உழைப்பாளி. நிச்சயம் அவள், இந்த பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்வாள் என்று நம்புகிறேன். சுஷ்மா போன்ற அபூர்வ திறமை கொண்ட பிள்ளைகளை ஊக்குவிப்பதற்காகவே, அவளுக்கு பட்டப்படிப்பு படிக்க அனுமதி அளித்ததாக, பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது நம்பிக்கையை சுஷ்மா நிச்சயம் காப்பாற்றுவாள். இவ்வாறு தேஜ் பகதூர் கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=158174

Leave a comment

112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் “இளைஞர்’

யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது “இளைஞர்’ ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மணலூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (112). இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வசித்து வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். ஆனால், தனது மகள்கள் வீட்டில் தங்காமல் தள்ளாத வயதிலும், யார் தயவும் இன்றி தனியாக வசித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்தும், தனக்கு தெரிந்த கயிறு திரிக்கும் தொழிலைக் கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டி வருகிறார். ஆடு மேய்த்த நேரம் போக, கிழிந்த நைலான் சாக்குகளைக் கொண்டு கயிறு செய்து விற்பனை செய்து அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.

என்னால் முடியாதது ஒன்றும் இல்லை என வெறுமனே வாயால் கயிறு திரித்து உழைக்க விரும்பாமல், அடுத்தவர்களை நம்பியே காலத்தை ஓட்டும் இந்தக்கால இளைஞர்கள் மத்தியில், தள்ளாத வயதிலும், யாருடைய தயவையும் எதிர்பாராமல் உழைத்து சாப்பிடும் முதியவரை, இல்லை, இல்லை இந்த 112 வயது”இளைஞரை’ நினைத்தால் பெருமைப்படாமல் இருக்க முடியாது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143437

( 1 ) Comment

மாரிச்செல்வம் – ஒரு நிஜ ஹீரோ

சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி (அப்புசாமி சீதாப்பாட்டி புகழ் தியாகிகள் என்ற தலைப்பில் தேர்வு எழுதச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் படும் பாட்டை எழுதியிருந்தார். பெற்றோர்கள் என்னதான் பரீட்சை எழுதச் செல்லும் பிள்ளைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்தாலும் அந்தப் பிள்ளைகள் பெற்றோரைத் தலைகுனிய வைக்குமளவுதான் மதிப்பெண்கள் எடுக்கின்றார்கள். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோரெல்லாம் இது மாதிரி நமக்கு ஒண்ணு பிறக்கலையே என்று ஏங்க ஆரம்பிக்கின்றார்கள். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாலும் பள்ளத்தில் விழுந்தே தீருவேன் என்று சபதமிட்டு பெற்றோரை பரிதவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில் தாயைப் போன்று தன்னை வளர்த்த அக்காவின் பிணத்தருக்கே அழுகையோடு படித்து மதிப்பெண்களை அள்ளிஎடுத்து தன் அக்காவின் கனவை நனவாக்கிய ஒரு ஏழைச் சிறுவனின் சாதனைக் கதை. இது மாதிரி ஒரு பிள்ளையோ சகோதரனோ நமக்கு இருந்திருக்கக் கூடாதா என்று படிப்பவர்களை ஏங்கவைக்கும் ஒரு முன்னுதாரணம் .

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம்.தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி.அவனும் இந்த முறை தேர்வு எழுதியவன்தான் ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை

மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியாசொல்ல அள்ளிக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன்.அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக் கொண்டே அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனைஅடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன.ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்தபெற்றுவந்த மாரிச்செல்வம், +1 சேருவது தொடர்பாக நிறுவனத்திற்கு வந்தபோது மாரிச்செல்வத்தை சந்தித்து பேசியதிலிருந்து அவனது சாதனையின் பின்னிருந்த பல வேதனையான சம்பவங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர்.எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரிமேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால் அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய் அம்மா நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா என்று கூறினான்.அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி வேணாம் மாரி நீ போய்ப் படி.அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும்எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார்.அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன.தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

மூன்று பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது.கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. இரண்டு பெண்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும் இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும் சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும் மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். மாரி இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார்.முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா,அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார்.முருகேஸ்வரியின் கணவர் முனியாண்டி பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரி திருமணத்தை முடித்து வைத்தனர்.

தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது கூலி வேலைக்குச் செல்வது கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது.முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம் பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி என அக்கா கேட்டார். ஆமாக்கா. இன்னிக்கு English பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும் என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. என்னக்கா ஏன் இப்படி இருக்க என்னாச்சு…. என்று அவன் பதற ஒண்ணுமில்ல மாரி நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும் என்றார். சரிக்கா நீ போய் தூங்குக்கா என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை நாளைக்குப் பரீட்சை எழுதணும்…நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா என்று அனைவரும் தேற்றினர். மாரிநீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம் என அவன் மாமா கூறவும் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம். “என்ன சார் மார்க் எடுத்தேன்…அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும் அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி.பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.அவனுடைய ஆசிரியர்கள் சக மாணவர்கள் அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா தமிழ்-95 ஆங்கிலம்-98 கணிதம்-100 அறிவியல்-99 சமூகஅறிவியல்- 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம்.அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

மாரி…இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி.வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல் ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும் அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயது வரை பொறுத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான்.அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை.குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியாண்டி பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும் தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்.

http://gomannar.blogspot.com/2011/06/blog-post_17.html

( 1 ) Comment

நம்பிக்”கை’! யுடன் சாதனை படைக்கும் பெண்

பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் கால்களாலேயே செய்து காண்போரை பிரமிக்க வைக்கிறார் ஓர் இளம் பெண்.

சிலர் எல்லா உறுப்புகளும் நன்றாக இருந்தும் பிச்சை எடுத்தும் ஏமாற்றி பிழைத்து வாழ்கின்ற இந்த கால கட்டத்தில் பிறவியிலேயே இரு கைகளையும் இழந்த இப்பெண் தன்னம்பிக்கை ஒன்றையே கையாக கொண்டு அனைத்து வேலைகளையும் தானே செய்து எவர் உதவியும் இன்றி வெற்றி நடைபோடும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

உடல் உறுப்பு குறைபாடு இருப்பினும் உள்ளம் உறுதியுடன் செயலாற்றினால் இந்த உலகை அளக்கலாம் என்று தன்னம்பிக்கை ஊட்டுவார்கள் அறிஞர்கள். அந்த வகையில் இந்தப் பெண் ஒவ்வொரு நாளும் தனது அன்றாட பணிகளையும் தாமே செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டின் வறுமையைப் போக்கவும் வாழ்வின் ஜீவாதாரத்தைப் பெருக்கவும் ஒரு சிறு இட்லி கடையை வைத்து நடத்தி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது குருவப்பநாயுடு கண்டிகை கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த மணிவேல், எலன் தம்பதியருக்கு 5 பிள்ளைகள். இதில் மூத்த மகளான பரமேஸ்வரிக்குப் பிறவியிலிருந்தே இரு கைகளும் இல்லை. ஆனால் மனம் தளராத இவர் தனது கால்களாலேயே எழுதப் படிக்க கற்றுக்கொண்டு 5 -ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.இவர் இப்பகுதி மகளிர் குழுத் தலைவியாகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் தனது தந்தை வைத்துள்ள இட்லி கடையில் தந்தைக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் காலிலேயே செய்து வருவதோடு கடைக்கு வருபவர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறார். இது மட்டுமில்லாமல் வீட்டு வேலைகளான கோலம் போடும்வது, உணவு சமைப்பது, துணி துவைப்பது, தலையை வாருவது, கைப்பேசியை பயன்படுத்தி பிறரிடம் பேசுவது, வீட்டை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல வேலைகளையும் இவர் தனது கால்களாலேயே செய்து பார்ப்போரை பிரமிக்க வைக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உள்ள உடல் குறைபாடுகளை எண்ணி வேதனைப்படும் இக்காலத்தில் தனக்கு இரண்டு கைகள் இல்லை என்ற நிலையிலும் தனது வேலைகளை தானே செய்துகொண்டு யாருக்கும் சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார் இவர். கை, கால்கள் இருப்பவர்களே தன்னுடைய வேலைகளை செய்ய கஷ்டப்படும் இக்காலத்தில் பரமேஸ்வரியைப் போன்றோர் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து பரமேஸ்வரி கூறும்போது, “”நான் பிறந்தபோது இரு கைகளும் இல்லாமல் பிறந்தேன். சிறு வயதில் இப்படி பிறந்துவிட்டோமோ என எண்ணி வருத்தப்பட்ட காலங்கள் உண்டு. நாளடைவில் அந்த குறையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிறு வயதிலிருந்தே சிறு வேலைகளை எனது கால்களாலே செய்ய தொடங்கினேன். பிறகு அனைத்து வேலைகளையும் செய்யப் பழகிக்கொண்டேன். தற்போது திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகையில் எனது தந்தை வைத்திருக்கும் இட்லி கடைக்கு சென்று அவருக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறேன்.

மேலும் வீட்டில் இருக்கும்போது எனது வேலைகளை நான் யாரிடமும் செய்ய கேட்பதில்லை. எந்த வேலையாக இருந்தாலும் நம்மால் செய்ய முடியம் என நம்பிக்கை வைத்துக்கொண்டு எனது வேலைகளை நானே செய்துகொள்கிறேன். மாற்றுத்திறனாளியாக பிறந்துவிட்டோமோ என எண்ணி யாரும் வருத்தப்படக்கூடாது. மேலும் யாரும் வருத்தப்படுவது, தற்கொலை செய்துகொள்வது போன்ற செயல்கள் செய்ய கூடாது. வருத்தப்படாமல் முயற்சி செய்து மகிழ்ச்சியாக இந்த உலகில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகம் நம் எல்லோருக்குமானதுதான்.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sunday%20Kondattam&artid=342151&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%22%E0%AE%95%E0%AF%88

( 1 ) Comment

கபடி விளையாட்டில் கவிதாவின் சாதனை கதை

;என் சொந்த ஊர் சென்னை. எங்க வீட்டில் ஐந்து பெண்கள். நான் தான் கடைசி பெண். ஆவடியில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்தேன். என் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை, என் பள்ளி தான். “கபடி விளையாட்டில் நீ கண்டிப்பா உயரம் தொடுவாய்’ என்று ஊக்கமளித்தனர்.

;நான் கபடி விளையாடுவதில் என் அம்மாவிற்கு விருப்பமில்லை. அரை மனசா தான் போட்டிகளுக்கு அனுப்புவார்.தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்க குஜராத் செல்லும்போது, எதிர்பாராத விதமா என் அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டார். என் பள்ளி ஆசிரியைகள் தான் என்னை மனதளவில் தேற்றி போட்டிக்கு அனுப்பினர். அதில் நாங்கள் தோல்வியடைந்தோம். அப்ப தான், கபடியில் பெரிய ஆளா வருவாய் என்று ஆசீர்வதித்தார் என் அம்மா. பின், பத்து நாளில் இறந்து விட்டார். அந்த வார்த்தைகள் என்னை இன்னும் மெருகேற்றின.கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போதே கான்ஸ்டபிளா வேலையில் சேர்ந்து விட்டேன். எங்க துறையில் நான் தான் கபடி ஸ்டார்.

இந்த முறை ஆசிய போட்டியில், முதல் முறையாக பெண்கள் கபடி குழுவை இணைத்தனர். இதில் நாம் ஜெயிப்போம்னு முழு நம்பிக்கையுடன் தயாரானோம்.இந்தியாவில் இருந்த கபடி கோச் நிறைய பேர் இப்ப வெளிநாட்டு டீம்களுக்கு கோச் ஆனதால், நம் டெக்னிக் எல்லாம் அந்நாட்டு வீரர்களுக்கு அத்துப்படி. இந்தியன் டீம் விளையாடும் போது அதை வீடியோ எடுத்து, எங்க டெக்னிக்கை தெரிந்து கொண்டு அவர்களும் பின்பற்றுவதால், நாங்க டெக்னிக்கை மாற்றிக் கொண்டோம்.இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த இந்தியா ஆண்கள் கபடி டீமும், பெண்கள் கபடி டீமும் இணைந்து விளையாடியதில், இந்தியா ஆறாவது இடத்திற்கு வந்தது. பரிசு வாங்கிக் கொண்டு இந்திய கொடியைப் பிடித்துக் கொண்டு, மைதானத்தில் நாங்க ஓடிய அந்த சந்தோஷ தருணம் இன்னும் கண்களிலேயே நிற்கிறது.

http://www.dinamalar.com//splpart_detail.asp?Id=93&dtnew=12/9/௨௦௧௦

Leave a comment

எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுவனின் வெற்றி கதை

சிறுவயதில் எவரெஸ்ட்டை தொட்டு, தன் பயணத்தை சுய சரிதையாக எழுதியுள்ள அர்ஜுன் வாஜ்பாய்: நொய்டாவில் ஒரு சாதாரண;குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சிறு வயதிலேயே சாகச கதைகளைக் கேட்பதில், படிப்பதில் ஆர்வம் அதிகம். பெரியவனான பின், சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.பத்து வயது வரை நானும், மற்ற குழந்தைகளைப் போல், படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தேன்.ஒரு முறை புத்தகத்தில், மலையேறுவது குறித்து படித்தேன். அதில் ஏற்பட்ட ஆர்வம், என்னை இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை தொட வைத்தது.

யார் வேண்டுமானாலும், எவரெஸ்ட்டிலோ அல்லது வேறு மலைகளிலோ ஏறி விட முடியாது. மலை சிகரத்தின் உயரம், தன்மை, அங்கு உள்ள குளிர், ஆக்சிஜன் அளவு போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்த பின், வயது, உடல் தகுதி ஆகியவற்றை கொண்டு தீர்மானிப்பர். இமயமலை மீது யாரும் தனியாக ஏற முடியாது. பல சிகரங்களில் ஏறியவர்களின் வழிகாட்டுதல், சக மலையேற்ற வீரர்களின் ஒத்துழைப்பு, பொருட்களை மேலே தூக்கிச் செல்வதற்கு உதவி பணியாளர்கள், என, எல்லாம் சேர்ந்தால் தான் சிகரம்.நல்ல குழு இல்லாவிட்டால், தோல்வி நிச்சயம்.

ஆரம்பத்தில், என் பெற்றோர் தடுத்தாலும், என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, என்னை அனுப்பினர். பணத்திற்கு ஸ்பான்சரரும், அரசும் உதவ முன் வரவில்லை. என் உறவினர்களின் சொந்த முயற்சியால், பணத்தை தயார் செய்தோம். பல பிரச்னைகள், சிரமங்களுக்கு பின், ஒரு நல்ல மலையேற்றக் குழுவினருடன் மலையேறினேன்.கடந்த மே மாதம், எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தேன். இதன்பின், மலையேறுவதில் என் ஆர்வம் மேலும் அதிகமானது. ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள பெரிய சவாலான சிகரங்களையெல்லாம் தொட்டு வர விரும்புகிறேன். வட, தென் துருவங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும். எனக்கு நல்ல ஸ்பான்சரர் கிடைத்தால், இந்த துறையில் இந்தியாவிற்கு நல்ல பெயர் கிடைக்க பாடுபடுவேன்.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Leave a comment

இது வெற்றி கதைகளின் தொகுப்பு

என் நண்பர்களே,

நான் ஆங்கிலத்தில் ‘Inspire Minds’ என்னும் வலைப் பூவில் பல வெற்றிக் கதைகளை தொகுத்து வழங்கி வருகிறேன்.

ஆங்கிலத்தில் என்னுடைய ‘Inspire Minds’ வலைப் பூவை படித்த பல நண்பர்கள் தமிழிலும் ஒரு வலைப் பூவை தொடங்க என்னை கேட்டு கொண்டனர். எனவே பிரபல இதழ்களில் வெளி வந்த பல வெற்றிக் கதைகளை தொகுத்து நான் வழங்குகிறேன். தன்னம்பிக்கை ஊட்டும் உண்மைச் சம்பவங்களை ஓரிடத்தில் தொகுத்து கொடுக்கும் என் எளிய முயற்சியை பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

இந்த வலைப் பூ வாழ்வில் முன்னேற துடிக்கும் நண்பர்களுக்கு என் சமர்ப்பணம்.

ஹரி

Leave a comment